பள்ளி சென்ற 8ஆம் மாணவிகள் இருவர் திடீர் மாயம்.. 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்..!

Siva

வெள்ளி, 11 ஜூலை 2025 (15:41 IST)
ஆந்திராவில் பள்ளிக்கு சென்ற எட்டாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் திடீரென காணாமல் போன நிலையில், அவர்களை தொழில்நுட்ப உதவியுடன் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திராவில் உள்ள கோனசீமா என்ற மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவிகள் இருவர் பள்ளிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமிகள் என்பதால் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் நான்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.
 
இந்த நிலையில், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு சிறுமிகளும் ரயில் நிலையத்திற்கு செல்வது பதிவாகி இருந்தது. காணாமல் போன ஒரு சிறுமி தன்னுடைய உறவினருக்கு போன் செய்ததை தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டுபிடித்தனர். அவர்களுடைய மொபைல் டவர் இருப்பிடத்தை வைத்து திருப்பதி விரைவு ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் கண்டறிந்தனர்.
 
இதனை அடுத்து, அந்த இரண்டு சிறுமிகளின் புகைப்படங்களை ரயில்வே காவல்துறைக்கு அனுப்பிய காவல்துறையினர், அந்த சிறுமிகளை கண்டுபிடிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். ரயில்வே காவல்துறையும் அடுத்த ஸ்டேஷனிலேயே அந்த சிறுமிகளை மீட்டனர். அவர்களிடம் நகைகள் மற்றும் பணம் இருந்ததும் தெரியவந்தது.
 
இதனை அடுத்து, அந்த இரண்டு சிறுமிகளும் பத்திரமாக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். "தங்களுக்கு நன்றாகப் படிப்பு வரவில்லை என்றும், தங்களது பெற்றோர்கள் 'படிக்க வேண்டும், படிக்க வேண்டும்' என்று வற்புறுத்தியதால்தான் மன அழுத்தம் காரணமாக திருப்பதிக்கு மன நிம்மதியைத் தேடி சென்றதாக" அந்த இரண்டு சிறுமிகளும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்