வாரணாசியில் காருக்குள் மூச்சுத் திணறி 2 குழந்தைகள் உயிரிழப்பு

சனி, 27 ஜூன் 2015 (16:34 IST)
உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காருக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு விளையாடிய இரு குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
முஜாபாத் என்ற இடத்தில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் சத்யம் என்ற சிறுவனும், அவனது சகோதரி முட்கானும் விளையாடிக் கொண்டிருந்தனர். கார் கதவைப் பூட்டிக்கொண்டு அவர்கள் விளையாடியதால் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை காணாமல் தேடிய உறவினர்கள் காருக்குள் அவர்கள் இருப்பதை பார்த்து அதன் கதவை திறக்க முயன்றனர்.
 
ஆனால் கதவை திறக்க முடியாததால் கண்ணாடியை உடைத்து இருவரையும் வெளியே எடுத்தனர். இருப்பினும் இரு குழந்தைகளும் மூச்சு திணறலால் உயிரிழந்து விட்டனர். வீட்டின் அருகிலேயே குழந்தைகள் இறந்ததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கார் கண்ணாடிகளை உடைத்து கோபத்தை வெளிப்படுத்தினர். கார் கதவை பூட்டாமல் சென்ற உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் நெல்லை மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் போது மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ஏறி விளையாடிய 4 குழந்தைகள் இதேபோன்று மூச்சு திணறலால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்