இந்திய ரயில்வேயின் ரயிலில் பயணித்த பயணி ஒருவர் படுக்கை அறுந்து விழுந்ததால் பலியான சம்பவம் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரயில்வேயின் ரயில் சேவை பல்வேறு வழித்தடங்களில் செயல்பட்டு வரும் நிலையில் அதில் பலர் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர். அவ்வாறாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஒதுக்கப்படும் நிலையில், அதில் ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று படுக்கைகள் இருக்கும்.
சமீபத்தில் கேரளாவின் மலப்புரம் பகுதியை சேர்ந்த அலிகான் என்பவர் பஞ்சாப் செல்வதற்காக எர்ணாக்குளம் - டெல்லி இடையே செல்லும் மில்லேனியம் விரைவு ரயிலில் பயணித்துள்ளார். முன்பதிவு செய்திருந்த அவர் கீழ் பெர்த்தில் படுத்திருந்த நிலையில், நடு பெர்த்தில் வேறு ஒரு பயணி பயணித்துள்ளார். ரயிலானது அதிகாலை 5 மணியளவில் தெலுங்கானா வழியாக சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென நடு பெர்த் அறுத்து கீழ் பெர்த்தில் படுத்திருந்த அலிகான் மீது விழுந்துள்ளது. இதனால் கை, கால்களில் எலும்புகள் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மிட் பெர்த்தில் படுத்திருந்தவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ரயில்வே இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. அதில், விபத்துக்கு காரணமான படுக்கையை அதிகாரிகள் சோதனை செய்ததில் அது நல்ல நிலையில் உள்ளது தெரிய வந்துள்ளதாகவும், மிடில் பெர்த்தில் படுத்திருந்தவர் அதன் க்ளிப்புகளை சரியாக லாக் செய்யாததன் விளைவாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K