பேருந்து மீது ரயில் மோதல்: 2 குழந்தைகளை பறிகொடுத்த தந்தை மாரடைப்பால் மரணம்

வெள்ளி, 25 ஜூலை 2014 (15:38 IST)
பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 2 குழந்தைகளை பறி கொடுத்த தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த விபத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த சகோதர–சகோதரிகள் உயிரிழந்தனர்.
 
குண்டேடு பல்லி கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் சரண், தங்கைகள் திவ்யா, வித்யா ஆகிய 3 குழந்தைகள் பலியானார்கள். இஸ்லாம்பூரைச் சேர்ந்த அண்ணன்–தங்கையான வருன், சுவாதி ஆகியோர் பலியானார்கள்.
 
கிருஷ்ணாபூர் பகுதியைச் சேர்ந்த அக்காள்-தம்பி ரஜியா, ஹமீத் ஆகியோர் பலியானார்கள். இவர்களின் தந்தை முகமது வகீத் விபத்து நடந்த 10 நிமிடத்துக்கு முன்புதான் குழந்தைகளை பேருந்துசில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைத்தார். குழந்தைகளும் தந்தைக்கு கையசைத்து டா..டா.. சொன்னார்கள். சந்தோஷத்துடன் வீடு திரும்பிய சற்று நேரத்தில் விபத்து பற்றி தகவல் கிடைத்தது. பதறியடித்து முகமது வகீத் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு தனது குழந்தையை தேடினார். அப்போது தனது 2 குழந்தைகளையும் பிணமாக தூக்கி வந்து கிடத்தினர்.
 
இதை பார்த்து முகமது வகீத் தாங்கமுடியாமல் கதறி அழுதார். சிறிது நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். கணவன், குழந்தைகள் உடலை பார்த்து அவரது மனைவி கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்