அருண் ஜேட்லி மீது ஊழல் குற்றம் சுமத்திய பாஜக எம்.பி.க்கு சுப்பிரமணிய சுவாமி ஆதரவு

வெள்ளி, 25 டிசம்பர் 2015 (12:13 IST)
அருண் ஜேட்லி மீது ஊழல் குற்றம் சாட்டியுள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கீர்த்தி ஆசாத்திற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
 

 
பாஜக மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி மீது, அவரது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கீர்த்தி ஆசாத் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஆதாரங்களையும் வெளியிட்ட அவர், ஜெட்லி குற்றமற்றவர் என்றால் தன்மீது வழக்கு போடட்டும் என்று கூறியிருந்தார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக தலைமை, கீர்த்தி ஆசாத்தை பாஜக தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கியதோடு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தான் எந்த வகையிலும் கட்சிக்கு விரோதமாக செயல்படவில்லை என்று மறுத்திருந்தார்.
 
இந்நிலையில் கீர்த்தி ஆசாத், தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் விஷயத்தில், அவருக்கு தான் உதவப் போவதாக சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
 
மேலும், கீர்த்தி ஆசாத்தை சிறு வயதில் இருந்தே தனக்குத் தெரியும் என்றும், அவருக்கு உதவி செய்ய தனக்கு உரிமை உள்ளது என்றும் கூறியுள்ள சுப்பிரமணியசாமி, கீர்த்தி ஆசாத்தைப் போன்ற நேர்மையான தலைவரை கட்சி இழந்துவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்