நீண்ட நேரம் படிக்க மாத்திரை உட்கொண்ட மாணவி.. மருத்துவமனையில் அனுமதி!

Mahendran

செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (14:33 IST)
தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் கண்விழித்து படிக்க  மாத்திரை உட்கொண்ட பத்தாம் வகுப்பு மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பள்ளிகளில் இறுதி தேர்வு நெருங்கி வரும் நிலையில் முழு ஆண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அதற்காக இரவில் நீண்ட நேரம் பல மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
 
அந்த வகையில் லக்னோவில் பொதுத்தேர்வுக்கு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதற்காக தூக்கம் வராமல் தடுக்கும் மாத்திரையை பத்தாம் வகுப்பு மாணவி உட்கொண்டதாக தெரிகிறது. 
 
காபியுடன் சேர்த்து அவர் மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் மூளைக்கு செல்லும் நரம்புகளில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. இது போன்ற மாத்திரைகளை பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
எனவே தூக்கம் வந்தால் சிறிது நேரம் தூங்கி விட்டு அதன் பிறகு எழுந்து படிக்கலாம் என்றும் தூக்கத்தை தடுக்க மாத்திரைகளை எடுப்பது ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்