ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே உள்ள கரக்கம்பாடி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் அதிக அளவில் செம்மரங்கள் உள்ளது. இந்த செம்மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கடத்திச் செல்வதாக ஆந்திர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், திருப்பதி டிஎஸ்பி இலியாஸ் பாட்ஷா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக சென்ற ஒரு லாரி மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.30 லட்சம் மதிப்பு கொண்ட செம்மரக் கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்ட தமிழர்கள் 10 பேரை கைது செய்தனர்.