குழந்தையை உயிரோடு புதைத்து வழிபாடு நடத்திய கொடூரம்

வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (17:12 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் 2 1/2 வயது பெண் குழந்தை உயிரோடு புதைக்கப்பட்டதாகவும், அக்குழந்தைப் புதைக்கப்பட்ட இடத்தில் பூஜைகள்  செய்து அப்பகுதியினர் வழிப்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
ராஜஸ்தானில் உள்ள கும்ஹேர் கிராமத்தை சேர்ந்த குஷ்பு என்னும்  2 1/2 வயது பெண் குழந்தையை அவரது பெற்றோர் உயிரோடு புதைத்ததாக தகவல்கள் வெளியாயின.
 
புதைக்கப்பட்ட அக்குழந்தை கடந்த வியாழன் அன்று காலை உயிரிழந்துள்ளது. குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் பெற்றோர் பூஜை செய்து குழந்தை சமாதியாகிவிட்டதாக கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
 
இதையடுத்து அங்கு கூடிய கிராம மக்கள், குழந்தை புதைக்கப்பட்ட இடத்திற்கு பூ, பழம் போன்றவற்றை கொண்டுவந்து இறந்த குழந்தையை கடவுளைப் போல வழிப்பட துவங்கியதால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 
 
முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழந்த குழந்தை கடுமையான வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்