வட போச்சே! - பாஜக வழியில் சென்று வீழ்த்திய ராகுல்

செவ்வாய், 15 மே 2018 (16:34 IST)
கர்நாடகாவில் சரியான நேரத்தில் ராஜதந்திரமாக செயல்பட்டு பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தடுத்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

 
கடந்த 12ம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கியது. அதில், துவக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது. ஒரு கட்டத்தில் 110க்கும் அதிமான இடத்தில் பாஜக முன்னிலை வகிக்க, அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற நிலை உருவானது. 
 
ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 112 இடங்கள் பாஜகவிற்கு கிடைக்கவில்லை. மேலும், திடீர் திருப்பமாக, மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. காங்கிரஸின் முடிவை தேவகவுடாவும் ஏற்றுக்கொண்டார். எனவே, மஜத கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
பொதுவாக இதுபோன்ற முடிவுகளை இதற்கு முன்பு பாஜகவே எடுத்துள்ளது. 2017ம் ஆண்டு மார்ச் மாதம் கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடந்தபோது,  காங்கிரஸ் 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றது. ஆனாலும், சுயேட்சை வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுத்து பாஜக ஆட்சி அமைத்தது. 
 
தற்போது 78 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ் 37 இடங்களை பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது. சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்து பாஜக ஆட்சி அமைப்பதை  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தடுத்ததால் இது அவரின் ராஜதந்திரமாக பார்க்கப்படுகிறது. பாஜக 104 இடங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்