சுப்பிரமணியன் சாமியின் புகாரை அடுத்து பிரதமர் மோடியுடன் ரகுராம் ராஜன் திடீர் சந்திப்பு!

வியாழன், 26 மே 2016 (10:51 IST)
மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் பிரதமர் மோடியை நேற்று திடீரென சந்தித்துள்ளார். பிரதமரை சந்திக்கும் முன்னர் அவர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியையும் சந்தித்துள்ளார்.


 
 
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமி ரகுராம் ராஜன் மீது கடுமையாக சில குற்றச்சாட்டுகளை சமீபத்தில் வைத்தார். ரகுராம் ராஜன் மனதளவில் முழு இந்தியராக இல்லை எனவும், அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கிறார் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
 
அந்த கடிதத்தில் ரகுராம் ராஜனை மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கி அந்த பதவியில் வைக்க கூடாது எனவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட அவரை உடணடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார் சுப்பிரமணியன் சாமி.
 
இதனையடுத்து ரகுராம் ராஜனுக்கு இணையத்தில் ஆதரவு அலை பெருகியுள்ளது. அவரே மீண்டும் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக வர வேண்டும் என பலர் கருத்து சொல்லி வருகின்றனர்.
 
ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் ரகுராம் ராஜன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தார். இந்த சந்திப்பில் ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கைகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
 
பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன். இந்த சந்திப்பில் ரகுராம் ராஜன் குறித்து சுப்ரமணிய சாமி அண்மையில் மோடிக்கு எழுதிய கடிதம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்