பணத்தாசையால் பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய பெண்

திங்கள், 28 ஜூலை 2014 (17:28 IST)
மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் காசிமிராவில் மகளை விபசாரத்தில் தள்ளிய தாய் கைதானார். 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
 
மஹாராஸ்ட்ரா மாநிலம் தானே மாவட்டம் காசிமிரா பகுதியில் ஒரு ஓட்டலில் இளம்பெண்களை சிலர் கட்டாய விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக ஒரு தொண்டு நிறுவனத்தினர், காவல்துறையில் புகார் கொடுத்தனர். இதில் தொடர்புடைய ஒரு பெண்ணின் செல்போன் எண்ணிற்கு காவல்துறையினர் வாடிக்கையாளர் போல் தொடர்பு கொண்டு பேசினார்கள். பின்னர் போலி வாடிக்கையாளர்கள் 2 பேரை அங்கு அனுப்பி வைத்தனர்.
 
அவர்கள் ஓட்டல் அறைக்கு சென்றதும், அங்கிருந்த 2 பெண்கள், அவர்களிடம் ரூ.4 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு அவர்களுடன் 2 பெண்களை ஓட்டல் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.
 
இதையடுத்து காவல்துறையினர் ஓட்டல் அறையில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இருந்த 4 இளம்பெண்களை மீட்டனர். அவர்களை கட்டாய விபசாரத்தில் தள்ளிய சுவாதி, ரூபா ஆகிய 2 பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
 
மீட்கப்பட்ட இளம்பெண்களில் ஒருவர், கைது செய்யப்பட்ட சுவாதியின் மகள் என்பதும், பணம் சம்பாதிப்பதற்காக பெற்ற மகளையே அவர் கட்டாய விபசாரத்தில் தள்ளிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. காவல்துறையினர் மீட்கப்பட்ட இளம்பெண்கள் 4 பேரையும் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட சுவாதி, ரூபா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்