பெண்களின் கற்பை விட அதுதான் சிறந்தது: சர்ச்சை பேச்சால் சிக்கி தவிக்கும் சரத் யாதவ்!

வியாழன், 26 ஜனவரி 2017 (09:59 IST)
இந்திய பெண்களின் மானத்தை காட்டிலும் வாக்குரிமையே சிறந்தது என ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சரத் யாதவ் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பீகார் மாநிலம் பாட்னாவில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சரத் யாதவ், மக்கள் தங்களின் கவுரவமான வாக்குகளை பணத்துக்காக விற்கக்கூடாது. நம் நாட்டு பெண்களின் மானத்தைக் காட்டிலும் வாக்குரிமையே சிறந்தது.
 
எனவே ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது. ஏனென்றால், ஓட்டு என்பது பெற்ற மகள்களைப் போன்றதாகும். நமது மகள் அல்லது ஒரு பெண் கற்பிழந்தால், அவள் சார்ந்த சமூகம் மற்றும் ஊர் என அனைவரின் மரியாதையும் பாதிக்கப்படும்.
 
அதேபோல வாக்குகளை பணத்திற்கு விற்பதன் மூலம் வாக்குரிமைக்கு களங்கம் ஏற்பட்டு அது ஒட்டுமொத்த நாட்டையே பாதிக்கும் என்றார். சரத் யாதவின் இந்த கருத்து பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பெண்களை அவமதிக்கும் வகையில் சரத் யாதவ் பேசியதாக கூறி பல்வேறு மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தனது பேச்சு குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையம் சரத் யாதவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்