கேரள நடிகை கடத்தல் வழக்கு - போலீசாரிடம் காவ்யா மாதவன் அளித்த பதில் என்ன?

வியாழன், 27 ஜூலை 2017 (13:02 IST)
கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனிடம் சமீபத்தில் கேரள போலீசார் விசாரணை செய்தனர்.


 

 
கடந்த 10-ஆம் தேதி நடிகை கடத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், அந்த நடிகையின் வீடியோ அடங்கிய மெமரி கார்டை திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனின் துணிக்ககடையில் கொடுத்ததாக கூறியிருந்தார். 
 
இதனையடுத்து நேற்று முன்தினம் நடிகை காவ்யா மாதவனின் வீட்டில் கேரள போலீசார் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடத்தினார்கள். ஆறு மணி நேரம் நடந்த இந்த கிடுக்குப்பிடி விசாரணையின் போது காவ்யா மாதவன் கதறி அழுததாக காவல்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
 
மேலும், விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் எந்த பதிலையும் கூறவில்லை எனவும், பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது, இல்லை எனவே பதில் கூறியதாக தெரிகிறது. மேலும், அந்த நடிகையை பற்றி கூறும் போது, அவரும் நானும் நல்ல தோழிகளாக இருந்தோம். பல கலை நிகழ்ச்சிகளில் சேர்ந்து நடனமாடியிருக்கிறோம். ஆனால், சில காரணங்களால் நாங்கள் பிரிந்து விட்டோம் என்று மட்டும் கூறினாராம். 
 
காவ்யா மாதவனிடமிருந்து அதிரடியான தகவல்கள் எதுவும் கிடைக்காததால், விசாரணையை வேறு பக்கம் திருப்பியிருக்கிறதாம் கேரள போலீஸ் தரப்பு.

வெப்துனியாவைப் படிக்கவும்