பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

Mahendran

சனி, 19 ஜூலை 2025 (11:30 IST)
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 23 முதல் 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது இந்தியாவின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
 
ஜூலை 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி இங்கிலாந்தில் இருப்பார். அங்கு அவர் இந்தியா-இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திடுவார். இந்த ஒப்பந்தம், இங்கிலாந்துக்கு செல்லும் 99% இந்திய ஏற்றுமதிகளுக்கான வரிகளைக்குறைக்கும் என்பதால், இரு நாடுகளின் வர்த்தக உறவில் இது ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி மாலத்தீவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் 60-வது தேசிய தின கொண்டாட்டங்களில் முக்கிய விருந்தினராக பங்கேற்பார். முகமது முய்சு தலைமையிலான மாலத்தீவு அரசின் கீழ் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன் மாலத்தீவில் நடந்த "இந்தியா வெளியேறு"  பிரச்சாரத்தால் இரு நாடுகளின் உறவுகளில் சிக்கல் ஏற்பட்டது. அந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதற்கு முன்பு பிரதமர் மோடி கடந்த 2019 ஆம் ஆண்டு மாலத்தீவு பயணம் செய்த நிலையில், தற்போதுதான் அடுத்த கட்டமாக பயணம் செய்கிறார். இந்த பயணத்தின் போது இந்தியா-மாலத்தீவு இடையிலான உறவைச் சீர் செய்வதிலும், கூட்டு முயற்சிகளில் உறவை மேம்படுத்துவதிலும் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்