மகாபலி சக்ரவர்த்தி வழியில் நடப்போம்: பொன். ராதாகிருஷ்ணன் ஓணம் வாழ்த்துச் செய்தி

வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (23:16 IST)
நாம் அனைவரும், மகாபலி சக்கரவர்த்தியின் வழியில் சத்தியம் தவறாமல், தர்மத்தின் வழியில் நடப்போம் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஓணம் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
 
இது குறித்து, பாஜக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள  வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:–
 
நாட்டு மக்களின் போற்றுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் உரிய நல்லாட்சி நடத்தி வந்தவர் மகாபலி சக்கரவர்த்தி.
 
அவரது ஈகை மேன்மையை உலகறியச் செய்ய இறைவன் மகா விஷ்ணு, அரசனிடம் மூன்றடி உயர வாமன ரூபம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியை அடைந்து மூன்றடி நிலம் கேட்டார்.
 
மூன்றடி மனிதனிடம், மூன்றடி நிலத்திற்கு உறுதி கூறிய மகாபலி சக்கரவர்த்தியின் முன் விஸ்வரூபம் எடுத்த இறைவன், முதல் அடியால் மண்ணையும், அடுத்த அடியால் விண்ணையும் அளந்தார். அடுத்து, மூன்றாம் அடிக்கு இடம் கேட்ட போது, தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக கொடுப்பதற்கு இடம் இல்லை.
 
எனவே, தனது தலையைக் கொடுத்து தான் அழிந்தாலும் பரவாயில்லை தான் சொன்ன சொல் மாறமாட்டேன் என்ற உறுதி மொழியை நிறைவேற்றினார்.
 
சத்தியம் தவறாத தம் ஆட்சியாளனின் கைகளில் மகிழ்வோடு இருப்பதை பார்த்து மகிழ முடிவு செய்த மகாபலி சக்ரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் திருவோணப்பண்டிகையின் போது பூமியில் எழுந்தருளி தான் ஆண்ட மண்ணையும், மக்களையும் மகிழ்வித்தும், காத்தும், வருகிறார்.
 
மகாபலி சக்ரவர்த்தியை மகிழ்வோடு எதிர்பார்த்து திருவோணம் கொண்டாடும்  அனைவரும் சத்தியம் தவறாமல், அதே வேளையில் தர்மத்தின் வழியில் வாழ்க்கை நடத்தி, மகாபலி சக்ரவர்த்தியை மகிழ்ச்சிடயோடு வணங்கி வரவேற்று மகிழ்வோம். அனைவருக்கும் எனது திருவோணத்திருநாள் இனிய நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்