பாதுகாவலர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் - மோடியின் மனைவி யசோதா பென் அச்சம்

செவ்வாய், 25 நவம்பர் 2014 (13:14 IST)
இந்திரா காந்திக்கு ஏற்பட்டது போல், தனது உயிருக்கும் பாதுகாவலர்களால் ஆபத்து ஏற்படும் என்று நரேந்திர மோடியின் மனைவி யசோதா பெண் அச்சம் தெரிவித்துள்ளார்.
 
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி போட்டியிட்டபோது, தன்னுடைய வேட்பு மனுவில் தன் மனைவி என்ற இடத்தில் யசோதா பென் என்ற பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அவருடைய மனைவியின் பெயர் அனைவருக்கும் தெரிய வந்தது. பிறகு நரேந்திர மோடி பிரதமர் ஆனதையடுத்து யசோதா பென்னுக்கு கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் யசோதா பென் நேற்று அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி  தகவல் கேட்டு, காவல் துறை அலுவலகத்தில் 3 பக்க மனு ஒன்றை கொடுத்தார்.
 
அதில் யசோதா பென், "நான் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி. எனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவில், என்னென்ன விதிகள், சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
 
நான் எனது போக்குவரத்துக்கு அரசு பேருந்துகளையே பயன்படுத்துகிறேன். அப்போது நான் செல்லும் பேருந்துக்குப் பின்னால், பாதுகாவலர்கள் அரசு வாகனங்களில் பின் தொடர்கிறார்கள். இந்த பாதுகாப்பு வளையம் சில சமயம் எனக்குள் அச்சத்தை தருகிறது.
 
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு ஏற்பட்டது போல், எனது உயிருக்கும் பாதுகாவலர்களால் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று பயமாக உள்ளது. ஏனெனில் எனக்கு பாதுகாப்பு கொடுப்பதாகக் கூறும் வீரர்களுக்கும் எவ்வித அலுவலக உத்தரவு நகலும் இல்லை.
 
என் வீட்டுக்கு பாதுகாப்புக்கு வரும் கமாண்டோ வீரர்கள் உரிய அரசு உத்தரவுடன் தான் வருகிறார்களா என்பதை உறுதி படுத்த வேண்டும். பிரதமர் மோடியின் குடும்பத்தினர், சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் எனக்கு எத்தகைய பாதுகாப்பு தரப்படுகிறது என்ற விபரத்தை சான்றிதழாக தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்