அமெரிக்கா செல்ல போலி விசா வழங்கிய கேரள நடிகை நீத்து கிருஷ்ணா கைது

புதன், 26 ஆகஸ்ட் 2015 (23:13 IST)
அமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் வழங்கிய பிரபல கேரள நடிகை நீத்து கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.
 
கேரளாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நீத்து கிருஷ்ணா. இவர் பதனம் திட்டா பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் அமெரிக்கா செல்ல விசா கேட்டு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, இவரது ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது, அவை போலியானவை என்பது தெரிய வந்தது.
 
இது குறித்து தூதரக அதிகாரிகள் ராயப்பேட்டை காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடிகை நீத்து கிருஷ்ணைனிடம் விசாரணை நடத்தினர்.
 
அப்போது, இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு விசா வாங்கிக்  கொடுத்தது, கேரளா மாநிலம் செங்கனூரைச் சேர்ந்த  சுபாஷ் பத்மநாபன் என்பவர்தான் என வாக்கு மூலம் அளித்தார்.
 
இதனையடுத்து, நடிகை நீத்து கிருஷ்ணா மற்றும் கேரளாவை சேர்ந்த சுபாஷ்டின் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜாபன் அலி (42) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இருவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்