முத்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - தடையை மீறி போராட்டம் நடத்தப் போவதாக 'அன்பின் முத்தம்' அறிவிப்பு

புதன், 26 நவம்பர் 2014 (16:54 IST)
பெங்களூரில் முத்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், 'அன்பின் முத்தம்' அமைப்பினர் தடையை மீறி போராடப் போவதாக அறிவித்துள்ளனர்.
 
கேரள மாநிலத்திலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில், கடந்த மாதம் நடன நிகழ்ச்சி நடந்தது. அதில், கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை பாஜகவினர் விரட்டி அடித்தனர். இதனால் பாஜக தொண்டர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
 
இதனைக் கண்டித்து 'அன்பின் முத்தம்' என்ற முத்தம் கொடுக்கும் அமைப்பு தொடங்கப்பட்டது. இவர்கள், பொது இடங்களில் கூடி ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தப் போவதாக அறிவித்தனர். இதனால் கடந்த 2ஆம் தேதி கொச்சியில் இந்த அமைப்பினர் கூடி ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொண்டனர்.
 

 
மேலும் சில நாட்களுக்கு முன்பு, மும்பை ஐஐடியிலும், சென்னை ஐஐடியிலும் மாணவ, மாணவிகள் 'அன்பின் முத்தம்' அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து முத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இந்நிலையில், பெங்களூருவில் கடந்த 22ஆம் தேதி முத்தப் போராட்டம் நடத்தப்போவதாக மனித‌ உரிமை ஆர்வலர் ரெய்சிடா தனஞ்சே அறிவித்திருந்தார்.
 
இந்த முத்தப் போராட்டத்திற்கு மாநகர் காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி அனுமதி மறுத்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், 'முத்தப் போராட்டம் நடத்துவதற்கான நோக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. பொது இடத்தில் முத்தமிடுவது இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது. இதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும்' என்று தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்போவதாக அன்பின் முத்தம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள், "வருகின்ற 30ஆம் தேதி போலீஸாரின் தடையை மீறி முத்தப் போராட்டம் நடத்தப்படும். இதில் ஏராளமான இளைஞர்களும், கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர். எங்களை தாக்குவோர் மீது நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்' என்று அறிவித்துள்ளனர்.
 
இதற்கு பாஜக, சிவசேனா, முக்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்