கடைசி நேரத்தில் கிரண்குமார் ரெட்டி தேர்தல் போட்டியிலிருந்து விலகல்

சனி, 19 ஏப்ரல் 2014 (15:48 IST)
ஆந்திர முன்னாள் முதல்வரும் ஜெய் சமைக்கிய ஆந்திரா கட்சித் தலைவருமான கிரண் குமார் ரெட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து கடைசி நேரத்தில் விலகியுள்ளார்.
மே 7-ல் நடைபெறவுள்ள தேர்தலுக்கு இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்நிலையில் இன்று சீமாந்திரா பகுதிக்கு உட்பட்ட சித்தூர் மாவட்டம் பிளேரு தொகுதியில் போட்டியிட கிரண்குமார் மனுத்தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், கிரண் குமார் எதிர்பார்த்தபடி மனுத்தாக்கல் செய்யவில்லை. கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக அவரது சகோதரர் கிஷோர் குமார் ரெட்டி மனுத்தாக்கல் செய்தார்.
 
கட்சிக்காக சீமாந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய இருப்பதாக கிரண்குமார் ரெட்டி தெரிவித்தார். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தனித் தெலங்கானா உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரண் குமார் ரெட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்