ஜேஇஇ மெயின் தேர்வுக்கு இன்று கடைசி தேதி.. விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..!

Mahendran

வெள்ளி, 2 மே 2025 (10:36 IST)
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், கட்டாயமாக ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறுகிறது: அவை முதன்மைத் தேர்வு மற்றும் மெயின் தேர்வு ஆகும்.
 
2025 ஆம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு மே 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை கான்பூர் ஐஐடி இந்த ஆண்டு நடத்துகிறது.
 
மெயின் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கிய நிலையில், விண்ணப்பிக்க முடிவுக் காலம் இன்று அதாவது மே 2,  முடியவுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
 
இந்த தேர்வு காலை மற்றும் மதியம் என இரு அமர்வுகளில் நடைபெறும். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளிலும் கலந்தாய்வு முறையில் சேர்க்கை வாய்ப்பு வழங்கப்படும்.
 
மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ JEE இணையதளத்தில் (jeeadv.ac.in) அறிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்