பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இணைந்தார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், "என் சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது. என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பெரியவர்கள் இவ்வாறு செய்கிறார்களே" என்றார்.
முன்னதாக பிரதமரின் சகோதரர் பாஜகவில் இணைந்தது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்: "தல்ஜித் சிங் கோலி பாஜகவில் இணைந்தது மொத்த குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பாஜகவில் இணைந்த அவரது நோக்கம் தெரியவில்லை. இருப்பினும் அவர் விரும்பும் அரசியல் வாழ்க்கையை தேர்வு செய்ய அவருக்கு உரிமை உள்ளது. பிரதமருக்கும் அவரது சகோதரருக்கும் பல ஆண்டுகளாக எந்தவிதமான தொடர்பும் இல்லை". என்று தெரிவித்திருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது.