மருத்துவர்களை நான் மிரட்டவில்லை.! பாஜகவுக்கு எதிராக பேசினேன்.! மம்தா பானர்ஜி..!

Senthil Velan

வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (15:05 IST)
பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் மருத்துவர்களை நான் மிரட்டியதாக கூறுவது உண்மையல்ல என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி விளக்கமளித்துள்ளார்.
 
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தும் மருத்துவர்களை அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு மிரட்டியதாக செய்திகள் வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து மம்தா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
 
அதில், சில செய்தித்தாள்கள், மின்னணு மற்றும் டிஜிட்டல் மீடியாக்களில் தீங்கிழைக்கும் தவறான செய்திகளை நான் கண்டேன் என்றும் நேற்று எங்கள் மாணவர் அமைப்பு நிகழ்ச்சியில் நான் பேசியதை குறிப்பிட்டு இந்த பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 
போராடும் மருத்துவர்களுக்கோ, மாணவர்களுக்கோ எதிராக நான் ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை என்பதை மிகத் தெளிவாகத் தெளிவுபடுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களின் போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் என்றும் அவர்களின் போராட்டம் உண்மையானது என்றும் மம்தா தெரிவித்துள்ளார். 
 
சிலர் கூறுவது போல, நான் அவர்களை ஒருபோதும் அச்சுறுத்தவில்லை என்றும் இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மத்திய பாஜக அரசின் ஆதரவுடன், மேற்குவங்கத்தில் ஜனநாயகத்தை அச்சுறுத்தி, அராஜகத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக நான் பேசியுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
 
மத்திய அரசின் ஆதரவுடன், சட்டவிரோத செயல்களை மாநிலத்தில் உருவாக்க முயற்சிக்கின்றனர், அவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினேன் என்று மம்தா குறிப்பிட்டுள்ளார். நேற்றைய எனது உரையில் நான் பயன்படுத்திய சொற்றொடர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச தேவரின் கூறிய சொற்றொடர் என்பதையும் தெளிவுபடுத்துகிறேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.


ALSO READ: 2025 பொங்கல் பண்டிகை - இலவச வேட்டி, சேலை.! ரூ.100 கோடி ஒதுக்கீடு..!

மேலும் குற்றங்கள் மற்றும் கிரிமினல் குற்றங்கள் நடக்கும் போது, ​​எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்