வருடத்திற்கு இருமுறை மட்டும் குளிக்கும் கணவனை கைது செய்யுங்கள் : மனைவி விநோத புகார்

வியாழன், 31 மார்ச் 2016 (14:35 IST)
தன் கணவனும், கணவனின் குடும்பத்தாரும் குளிப்பதே இல்லை என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விநோத சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.


 

 
உத்திரப்பிரதேச மாநிலம் பாக்பட் நகரில் வசிக்கும் ஒரு பெண், மாவட்ட போலீஸ் அதிகாரியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாதத்தில் ஒரு முறை கூட குளிப்பதில்லை. கடைசியாக அவர்கள் போன தீபாவளிக்கு குளித்தனர். அதன்பின் இந்த ஹோலி பண்டிகையன்று குளித்தனர். இப்படி தொடர்ந்து 6 அல்லது 7 மாதங்களுக்கு குளிக்காமலேயே இருக்கின்றனர்.
 
இதுபற்றி நான் கேட்டால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இப்படி ஒரு விநோத புகாரை அந்த போலீசார் கண்டிருக்கவில்லை. எனினும், அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
இதுபற்றி அவ்வூர் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் “அந்த பெண் அவர்களை சுத்தமாக இருக்க சொல்லியிருக்கிறார்.  ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளாமல், வியாபாரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருந்து உள்ளனர். மேலும் அந்த பெண்ணை அவர்கள் அவமானப்படுத்தியுள்ளனர்” என்று கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்