வரலாற்றை திரித்து இந்தியாவை இந்து நாடாக மாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன: சரத் பவார்
சனி, 6 பிப்ரவரி 2016 (12:47 IST)
பள்ளிக்கூட புத்தகங்களில் வரலாற்றை திரித்து வெளியிட்டு, இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கான முயற்சி நடைபெறுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாற்றியுள்ளார்.
மும்பையில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பேசிய சரத் பவார் அதில் உரையாற்றினார்.
அப்போது அவர கூறியதாவது:-
பள்ளி புத்தகங்களில் வரலாற்றை திரித்து வெளியிட்டு, இந்தியாவை இந்து நாடாக மாற்றும் முயற்சியில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள்.
நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு இது தீங்கு விளைவிப்பது மட்டுமல்ல, மிகவும் ஆபத்து நிறைந்தமாகும்.
இந்த செயல் சமுதாயத்தில் நஞ்சை பரப்புவதற்கும், இளைஞர்களின் மனதில் கெடுதியை விதைப்பதற்கும் இது காரணமாக அமையும்.
எனவே, நாம் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், இது மிகவும் தீவிரமான பிரச்சினை யாகும். எனவே, எழுத்தாளர்கள் இது குறித்து கட்டுரைகளை எழுத வேண்டும். விவாதங்களும் அரங்கேறப்பட வேண்டும்.
சிவாஜி இசுலாமியர்களுக்கு எதிரானவர் என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல.
தன்னுடைய படையில் அவர் இசுலாமியர்களை முக்கியமான இடத்தில் வைத்திருந்தார். ஆகையால், இதுபோல் வரலாற்றை திரித்து கூறுவது மதச்சார்பற்ற நாட்டுக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லது அல்ல" இவ்வாறு சரத்பவார் கூறினார்.