எனக்கு அரசு நிலம் வழங்கியதில் எந்த தவறும் இல்லை: ஹேமமாலினி

செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (13:27 IST)
நடிகை ஹேமமாலினி ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர். பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த அவர் உத்தர பிரதேசத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு மாதத்திற்கு முன்பு மராட்டிய மாநில அரசு மும்பையின் அந்தேரி பகுதியில் நாட்டிய பள்ளி ஆரம்பிக்க ஹேமமாலினிக்கு 2 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை ஒதுக்கியது.
 

 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின் படி சமூக ஆர்வலர் அனில் கல்கலி இந்த நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
தகவல அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலில் ஹேமமாலினிக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.35 வீதம் 2 ஆயிரம் சதுர மீட்டருக்கு வெறும் ரூ.75 ஆயிரம் தான் பெற்றுள்ளனர். சந்தை நிலவரப்படி சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.75 ஆயிரத்துக்கு ஒதுக்கியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ஹேமமாலினி மும்பை செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எனக்கு அரசு நிலம் வழங்கிய விவகாரத்தில் எழுந்த சர்ச்சையின் மூலம் எனது நடனப் பள்ளிக்கு பிரபலம் ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி. ஆனால் இதில் என்ன நிலம் மோசடி நடந்துள்ளது என்று தெரியவில்லை. நாட்டின் கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்கவும், கலாச்சாரத்தை வளர்க்கவும் மட்டுமே அரசிடம் நிலத்தை கேட்டேன். . எனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை  இந்த நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்குதான் வழங்கப்போகிறேன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்