இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் கோவா. இங்குள்ள புகழ்வாய்ந்த கடற்கரைகள், இறை வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உலகப் புகழ் வாய்ந்த கட்டடக்கலைகள் ஆகியவை கோவாவிற்குப் புகழ் சேர்ப்பவை ஆகும். இதனால், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து கோவாவிற்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், கோவா கடலில் கடந்த சில மாதங்களாக முதலைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, கடலில் உள்ள முதலையை ஒருவர் படம் பிடித்துச் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இதை கண்டு சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சியும், அச்சத்திலும், பீதியிலும் உள்ளனர்.
இது குறித்து கோவா மாநில துணை வனப்பாதுகாப்பு அதிகாரி கார்வெல்லோ கூறுகையில், கோவா கடலில் முதலை இருப்பதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. இது அரேபியன் கடலில் இருந்து வந்திருக்க வாய்ப்பு இல்லை. அருகில் உள்ள சாப்போரா ஆற்றில் இருந்துதான் வந்திருக்கலாம் என்றார்.