மீண்டும் பேராசிரியர் பணிக்குத் திரும்பும் மன்மோகன் சிங்

வியாழன், 7 ஏப்ரல் 2016 (15:12 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் பேராசிரியர் பணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போது நாடாளுமன்ற மேல்சபை எம்.பி.யாக உள்ளார்.
 
இந்நிலையில், வீட்டில் ஓய்வு எடுத்துவரும் அவரை சமீபத்தில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழக நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
 
இந்த சந்திப்பின்போது, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர பேராசிரியராக பணியாற்ற வருமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது.
 
அதன்படி, மன்மோகன் சிங் சண்டிகார் வரும் போதெல்லாம் நேரடியாக மாணவர்களுக்கு பாடம் நடத்துவார் என்றும்,மற்ற நேரங்களில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
1954 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 
 
இதைத் தொடர்ந்து 1957 ஆம் ஆண்டு முதல் அங்கு முதுநிலை பேராசிரியராக பணிபுரிந்தார். பின்னர் 1966 ஆம் ஆண்டு ஐ.நா. பொருளாதார விவகாரங்களுக்கான அதிகாரியாக பணியாற்றினார்.
 
இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி இயக்குனராகவும் பொருளாதார ஆலோசகராகவும் பொறுப்பு வகித்த அவர் பின்னர் 10 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்