பேஸ்புக்கில் ப்ரெண்ட் ஆகி பெண்களிடம் பாலியல் உறவில் ஈடுபட்ட இளைஞர் கைது

வியாழன், 23 அக்டோபர் 2014 (17:09 IST)
பேஸ்புக் மூலம் நண்பர்களான இளம்பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் உறவில் ஈடுபட்ட 22 வயது கட்டுமானத் தொழிலாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
இது தொடர்பாக, திருவனந்தபுரம் பூவார் காவல்துறையினர் கூறுகையில், பெரும்பழுதூர் கல்லுமல்லா பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர், பேஸ்புக் மூலம் பல இளம்பெண்களை தனது நட்பு வட்டத்தில் இணைத்துக்கொண்டு பின்னர் அவர்களை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்குறுதிக் கொடுத்து பாலியல் உறவு மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் காவல்துறைக்கு வந்தன.
 
இதனையடுத்து தொடர் விசாரணையில் 22 வயது கட்டுமானத் தொழில் செய்து வரும் இளைஞர் மீது சந்தேகம் வந்தது. பின்னர் அவரின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, இளைஞரைக் கைது செய்தோம். விசாரணையில், அவரிடம் நெருங்கிப் பழகிய பெண்களின் புகைப்படங்கள், வீடியோ படங்கள் மற்றும் பெண்களின் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளோம் என்றனர்.
 
கைது செய்யப்பட்ட இளைஞர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்