முன்னாள் பிரதமர் மகள்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு வாபஸ்

வியாழன், 24 செப்டம்பர் 2015 (18:23 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்பு படை வாபஸ் பெறப்படுகிறது.
 

 
பிரதமர், முன்னாள் பிரதமர், முன்னாள் பிரதமர்களின் குடும்பத்துக்கு சிறப்பு படை பாதுகாப்பு (எஸ்பிஜி) அளிக்கப்படுகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது குடும்பத்துக்கு சிறப்பு படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்புப் படை பாதுகாப்பு தேவையில்லை என்று மன்மோகன் சிங்கின் மகளும், எழுத்தாளருமான தாமன் சிங் கடந்த மாதம் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
 
இதேபோல் மற்றொரு மகளும், தில்லி பல்கலைக்கழக பேராசிரியருமான உபேந்திர சிங் இப்போது தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு படை பாதுகாப்பை விலக்கி கொள்ளுமாறு கடிதம் எழுதி இருக்கிறார்.
 
இதையடுத்து முன்னாள் பிரதமர் மகள்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு படை பாதுகாப்பு விலக்கி கொள்ளப்படுகிறது. இதை உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்