இந்திய அரசை தேவ்யானி ஏமாற்றி விட்டார் - வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு

புதன், 22 ஜூலை 2015 (14:25 IST)
இந்திய தூதரக அதிகாரியாக பணிபுரிந்த தேவயானி கோப்ரகாடே, அவருடைய குழந்தைகளுக்கு இரண்டு பாஸ்போர்ட்களைப் பெற்றதன் மூலம் இந்திய அரசை ஏமாற்றி விட்டார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றச்சாட்டியுள்ளது.
 

 
2013ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிற்கான இந்திய தூதரக அதிகாரியாக பணிபுரிந்தவர் தேவயானி கோப்ரகடே. அப்போது அவருடைய பணிப்பெண் சங்கீதாவுக்கு விசா மற்றும் சம்பளம் வழங்குவதில் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்  வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க இந்திய சட்டம் அனுமதிக்கவில்லை. இதனால், தேவ்யானியின் குழந்தைகளுக்கான இந்திய பாஸ்போர்ட்கள் செல்லாது என்று அறிவித்தது.
 
இந்த உத்தரவை எதிர்த்து தேவ்யானியின் குழந்தைகள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
 
அந்த மனுவில், ”குழந்தைகளுக்கு இரண்டு பாஸ்போர்ட்கள் வைத்திருப்பது தேவயானியின் நேர்மை குறித்து சந்தேகத்தை எழுப்பி உள்ளது. அவருடைய குழந்தைகளுக்கு அமெரிக்க பாஸ்போர்ட் இருக்கும் தகவலை வெளியுறவுத் துறையிடம் அவர் மறைத்திருக்கிறார்.
 
அமெரிக்க பாஸ்போர்ட் பெற்ற நிமிடத்திலேயே அந்த குழந்தைகள் இந்திய பிரஜைகள் என்ற தகுதியை இழந்து விட்டனர். இத்தகைய செயல்களால் இந்திய அரசை தேவயானி ஏமாற்றி விட்டார். இந்திய வெளியுறவுத் துறை சேவைக்கான நடத்தை மற்றும் ஒழுங்கு விதிகளையும் மீறியுள்ளார்.
 
16 ஆண்டுகள் பாஸ்போர்ட் பிரிவில் பணியாற்றிய இந்த வெளியுறவுத்துறை அதிகாரி, வேண்டுமென்றே இந்த தகவலை மறைத்துள்ளார். இவருடைய இந்த செயல் அமைச்சகத்துக்கு கடுமையான கவலையை ஏற்படுத்தி உள்ளது. நேர்மையற்ற வழியில் செயல்பட்டதால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது” என்று குறிப்படப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்