காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது: மத்திய அரசு வாதம்!

திங்கள், 3 அக்டோபர் 2016 (11:22 IST)
இன்னும் 3 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.


 
 
காவிரி நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் 3 முறை உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. நேற்று டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
 
இந்நிலையில், நேற்று நடந்த இருமாநில பேச்சுவார்த்தை விவரங்களை மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது, வருகிற அக்டோபர் 4ம் தேதிக்குள் அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிடும் உரிமை இல்லை என மத்திய அரசு வாதிட்டுள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் உத்தரவில் திருத்தம் செய்ய கோரி மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் மனு மீது நாளை பிற்பகலில் விசாரணை நடக்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்