இணையதள சேவை பெற 40,000 இடங்களில் வை-ஃபை வசதி: பிஎஸ்என்எல் முடிவு

புதன், 6 ஜனவரி 2016 (21:13 IST)
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமளிக்க 40,000 இடங்களில்
வை-ஃபை வசதியை ஏற்படுத்தும் பணி துவங்கியுள்ளது என பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
 

 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியிருப்பதாவது: பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவையை வழங்கவில்லை. அதற்கான அலைக்கற்றை ஒதுக்கீடும் எங்களிடம் இல்லை. இந்நிலையில் போட்டிகளை சமாளிக்கும் விதமாக நாடு தழுவிய அளவில் 40,000 இடங்களில் வை-ஃபை வசதியை ஏற்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இதன் மூலம், 4ஜி-யைக் காட்டிலும் அதிகமான வேகத்தில் இணையதள சேவைகளைப் பெறலாம்.

தற்போது நாடு முழுவதும் 500 இடங்களில் வை-ஃபை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதனை நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் 2,500ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. தொலைத் தொடர்பு சேவையை மேம்படுத்தும் நோக்கில், ரூ.5,500 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் 25,000 பிஎஸ்என்எல் டவர் அமைக்கப்பட உள்ளன.
 
கடந்த நிதி ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லாபம் ரூ.672 கோடியை எட்டியுள்ளது. இது, நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் ரூ.1,000 கோடியை எட்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில், பிஎஸ்என்எல் நிறுவனம் நிகர லாபத்தை அடையும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறிப்பிட்டார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்