முறுக்கு திருடிய சிறுவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கிய கொடூரம் (வைரல் வீடியோ)

செவ்வாய், 23 மே 2017 (11:27 IST)
மஹாரஷ்டிரா மாநிலம் தானேவில் இரண்டு சிறுவர்கள் 5 ரூபாய் முறுக்கினை திருடி தின்றதற்காக அவர்களை கடையின் உரிமையாளர் நிர்வாணப்படுத்தி, தலைமுடியை வெட்டி, செருப்பு மாலை அணிவித்து கொடுமைப்படுத்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது.


 
 
தனேவின் உல்லாஸ்நகர் பிரேம் தேக்டி பகுதியில் 65 வயதான மெகமூத் பதான் என்பவர் பெட்டிக்கை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் 5 ரூபாய் முறுக்கு பாக்கட்டை எடுத்து சாப்பிட்டுள்ளனர்.
 
இதனை பார்த்த கடைக்காரர் சிறுவர்களிடம் சாப்பிட்ட முறுக்குக்கு காசு கேட்டுள்ளார். ஆனால் சிறுவர்களிடம் காசு இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கடைக்காரர் தனது மகன்களை அழைத்து சிறுவர்களின் தலைமுடியை அசிங்கமாக வெட்டி, அவர்களது உடைகளை கழற்றி அவர்களை நிர்வாணமாக்கியுள்ளார்.

 

 
 
இதனையடுத்து சிறுவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்த வாட்ஸ் அப் குரூப்களில் பகிர இது வைரலாக பரவியுள்ளது.
 
சிறுவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை தங்கள் பெற்றோர்களிடம் கூற அவர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சிறுவர்களை கொடுமைப்படுத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்