வேறு வாலிபருடன் உறவு : காதலர் தினமன்று காதலியை கொலை செய்த காதலன்

திங்கள், 15 பிப்ரவரி 2016 (16:08 IST)
தன்னை காதலித்து விட்டு, இன்னொரு வாலிபரோடு சுற்றிய இளம்பெண்ணை கொலை செய்த காதலனை போலிசார் கைது செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், சுங்கி ரெட்டிகாரி பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சேமநாராயண ரெட்டி. அவர் அதே பகுதியில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.
 
அவரும், அதே பகுதியில் வசிக்கும் நபிதா என்ற பெண்ணும் மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர். ஆனால் அவர்களின் காதலுக்கு அவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
 
இந்நிலையில், தனக்கு பெங்களூரில் வேலை கிடைத்து விட்டதாக தங்கள் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு, நபிதா திருப்பதி வந்துள்ளார். அங்கு ராஜன்னாபார்க் அருகே வீடு எடுத்து நபிதாவை தங்க வைத்துள்ளார் சேமநாராயண ரெட்டி. அதன் பின் அவர்கள் அடிக்கடி சந்தித்து வந்தனர். மேலும்,  சேமநாராயணன் அதே பகுதியில் இருக்கும் ஒரு மோட்டார் வாகன ஷோரூமில் நபிதாவுக்கு வேலையும் வாங்கி தந்துள்ளார். 
 
திடீர் திருப்பமாக, அந்த ஷோரூமில் தன்னுடன் வேலை பார்த்த வாலிபரோடு நபிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர், நபிதாவுக்கு புதிய ஸ்கூட்டி ஒன்றையும் வாங்கி கொடுத்தார். அந்த வண்டியை எடுத்துக் கொண்டு அவர்கள் இருவரும் பல இடங்களில் சுற்றித் திரிந்தனர்.
 
இதை எப்படியோ தெரிந்த கொண்ட சேமநாராயணன், நேற்று திருப்பதியில் நபிதா வசிக்கும் வீட்டிற்கு சென்று,  இதுபற்றி அவரிடம் விசாரித்துள்ளார். ஆனால் நபிதாவோ சரியாக பிடி கொடுக்கவில்லை. எங்கே தன் காதலி தன்னை விட்டு போய்விடுவாளோ என்று பயந்த சேமநாராயணன், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு நபிதாவை வற்புறுத்தியுள்ளார்
 
ஆனால் நபிதாவோ அதற்கு மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த சேமநாராயணன் நபிதாவை அடித்துக் கொன்று அந்த வீட்டிலேயே புதைத்து விட்டார். அதன்பின் அந்த வீட்டை காலி செய்து செய்து விட்டு வந்து விட்டார். 
 
இதற்கிடையில் நபிதா ஏன் வேலைக்கு வரவில்லை என்று அந்த ஷோரூம் நிறுவனத்தினர் அவரின் பெற்றோரிடன் தொலைபேசியில் விசாரித்தனர். அதன்பிறகுதான் தங்கள் மகள், பெங்களூருக்கு செல்லாமல், திருப்பதியில் இருந்துள்ளார் என்பது நபிதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து திருப்பதி சென்ற அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 
 
போலிசார் நடத்திய விசாரணையில், நபிதாவை சேமநாராயணன் கொலை செய்து, வீட்டிற்குள் புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். நபிதாவின் பிணமும் அந்த வீட்டிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. 
 
தன்னை ஏமாற்ற நினைத்த காதலியை காதலர் தினத்தன்று காதலன் கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்