சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகி வருகிறார். இந்நிலையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை இந்த வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பாலி நரிமன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறுகையில், ''சட்டப்பிரிவு 24ஏ-ன் படி வழக்கு என்பது விசாரணை மற்றும் மேல்முறையீடுகளை உள்ளடக்கியது. எனவே, அந்த சட்டம் இந்த மேல்முறையீட்டு மனுவிலும் பவானி சிங்கே ஆஜராகலாம் என்பதை உறுதிபடுத்துகிறது.
மேலும், விசாரணை அமைப்பு என்ற முறையில் பவானி சிங்கை நியமிக்க தமிழ்நாடு கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உரிமை உண்டு'' என்றார். மேலும், 1971ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய 2 தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி வழக்கறிஞர் பாலி நரிமன் வாதிட்டார்.