பெங்களூரு நகரில் குண்டு வெடிப்பு, பெண் ஒருவர் பலி

திங்கள், 29 டிசம்பர் 2014 (06:23 IST)
பெங்களூரு நகரில் குறைந்த சக்தி குண்டொன்று வெடித்ததில் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.


பெங்களூரு சர்ச் வீதியிலுள்ள உணவு விடுதியொன்றுக்கு வெளியில் இந்திய நேரப்படி இரவு 8 மணியளவில், இந்தக் குண்டு வெடித்துள்ளது.
 
உயிரிழந்த 38 வயதான பவானி என்ற பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று தி இந்து செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
'புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் நோக்குடன் இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது' என்று நகர காவல்துறை ஆணையர் எம்.என். ரெட்டி கூறியுள்ளார்.
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து பெங்களூரு நகரம் எங்கிலும் காவல்துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாக கருதப்படும் பெங்களூரு நகரில் 2008, 2010, 2013-ம் ஆண்டுகளிலும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்