தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் ஆட்சி அமைத்து ஒரு வருடங்களுக்கு மேலான பின்பும் முன்னாள் ராணுவத்தினருக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதனைக் கண்டித்தும் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தக்கோரியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் ராணுவத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்தினர். இது குறித்து முன்னாள் ராணுவ கூறுகையில்," அரசிடம் இருந்து மாத ஊதிய உயர்வை நாங்கள் கேட்கவில்லை. ஊதிய உயர்வு என்ற வார்த்தையை பயன்படுத்துவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். அது எங்களது கோரிக்கையும் அல்ல. ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்பது தான் எங்களது கோரிக்கை" என்றனர்.