என் மகன் இந்த தேர்தலில் தோற்க வேண்டும். முன்னாள் முதல்வரின் பேட்டியால் பரபரப்பு..!

Siva

புதன், 10 ஏப்ரல் 2024 (08:10 IST)
முன்னாள் கேரள முதல்வர் ஏகே ஆண்டனி தனது மகன் இந்த தேர்தலில் தோற்க வேண்டும் என்று பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் கேரள முதல்வர் ஏ.கே ஆண்டனியின் மகன் அணில் ஆண்டனி கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது அவர் பத்தினம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் ஏகே ஆண்டனி தனது மகனுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்றும் தனது மகன் பாஜகவில் இணைந்தது தவறு என்றும் எனது உடல் ஒத்துழைத்தால் மகனுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் கூறினார். 
 
மேலும் தனது மகன் தோற்க வேண்டும், பாஜக தோற்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றும் அதை பத்தினம்திட்டா மக்கள் செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 
 
சொந்த மகன் என்றாலும் பாஜக வேட்பாளர் என்பதால் அவர் தோற்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஏகே ஆண்டனி கூறி இருப்பது கேரள மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இது குறித்து அணில் ஆண்டனி கருத்து தெரிவித்த போது பத்தினம்திட்டா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தேச விரோத கொள்கையை உடையவர் என்றும் அவருக்காக எனது அப்பா ஆதரவாக பேசுவதை பார்க்கும் போது அவர் மீது கோபம் இல்லை அனுதாபம் மட்டுமே ஏற்படுகிறது என்றும் பத்தினம்திட்டா தொகுதியில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்று அவர் கூறினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்