பாவனா கடத்தலில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பு? - கேரளாவில் பரபரப்பு

செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (12:13 IST)
நடிகை பாவனா கடத்தல் சம்பவத்தில் மலையாள நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.


 

 
நடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு, படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
 
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய, பாவனாவிடம் ஏற்கனவே கார் ஒட்டுனராக பணிபுரிந்த பல்சர் சுனி என்பவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர்தான் இதில் முக்கிய குற்றவாளி எனத் தெரிகிறது. மொத்தமாக 7 பேர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
 
இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் விவகாரத்தில், ஒரு பிரபல மலையாள நடிகருக்கும், நடிகை பாவனாவிற்கும் இடையே பணம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததாகவும், எனவே, பாவனாவை அசிங்கப்படுத்துவதற்காக அந்த நடிகர் சொல்லித்தான் பல்சர் சுனி, இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் முதலில் செய்திகள் வெளியானது.
 
அந்நிலையில், பாவனா கடத்தலுக்கு காரணம்  நடிகர் திலீப் எனவும், இதற்காக ரூ.50 லட்சம் வரை அவர் கொடுக்க தயாராக இருந்ததாகவும் செய்திகள் வெளியானது. அதாவது, திலீப் தன்னுடைய முதல் மனைவி மஞ்சுமா வாரியரை பிரிவதற்கு, பாவனாதான் காரணமாக இருந்தார் எனவும், அதற்காக பழிவாங்கும் நோக்கத்தோடு திலீப் இந்த செயலை செய்துள்ளார் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
ஆனால், நடிகர் திலீப் இதை மறுத்துள்ளார். ஊடகங்கள் தன் மீது தவறாக பழி போடுவதாகவும், போலீசாரின் விசாரணை சரியான பாதையில் செல்வதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.  
 
இந்த விவகாரம் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்