இந்தியாவின் போபால் நகர மத்திய சிறையிலிருந்த சிறைக்காவலர் ராம் சங்கர் யாதவ் என்பவரை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி 8 சிறைக் கைதிகள் சிறைச் சுவர்களில் ஏறித் தப்பியோடி உள்ளனர்.
இந்த சிறைக்கைதிகள், தடை செய்யப்பட்ட இஸ்லாமியவாதக் குழுவான, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை (சிமி) சேர்ந்தவர்கள் என்று காவல் துறையினர் கூறுகிறார்கள்.
தப்பியோடிய இவர்கள் அனைவரும், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை போபாலின் புற நகர்ப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போபாலின் தலைமை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் சௌத்ரி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இது குறித்து இந்த சம்பவம் தொடர்பாக போபால் நகர மூத்த போலிஸ் அதிகாரி ராமா சிங் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறிகையில், ”அவர்களை சரணடையச் சொன்னோம், ஆனால் அவர்கள் போலிஸ் முற்றுகை வளையத்தை ஊடுருவிச் செல்ல முயன்றனர்” என்றார்.