ஊழலுக்கு எதிராக புதிய அரசியல் கட்சி தொடங்க சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழு முடிவு செய்துள்ளது. கட்சியின் பெயரை மக்களே தேர்ந்தெடுப்பார்கள் என்றும் 2014 மக்களவைத் தேர்தலில் எங்கள் புதிய கட்சி போட்டியிடும் என்றும் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
வலுவான லோக் பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 9 நாள்களாக அன்னா ஹசாரே குழு மேற்கொண்டு வந்த உண்ணாவிரதம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. ஹசாரேவுக்கு இளநீர் கொடுத்து உண்ணாவிரதத்தை இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் முடித்து வைத்தார்.
உண்ணா விரதத்தை முடித்த பின் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், லோக்பால் சட்டத்தை அமல்படுத்தினால் மத்திய அமைச்சர்கள் நாளையே சிறையில் இருக்க நேரிடும் என்பதால் அரசு கொண்டு வர மறுக்கிறது.
2014 மக்களவைத் தேர்தலில் எங்கள் புதிய கட்சி போட்டியிடும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி மேலிடம் தேர்ந்தெடுக்காது. மக்கள்தான் தேர்ந்தெடுப்பர். விவசாயிகள், இளைஞர்களிடையே சென்று அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.
வேட்பாளரின் சொத்து, தேர்தல் செலவு ஆகியவை குறித்து இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடுவோம். தேர்தலில் பண பலத்தை உடைப்பதற்காகவே நாங்கள் கட்சியைத் தொடங்குகிறோம். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல; மாற்றத்தைக் கொண்டுவரவே விரும்புகிறோம். அடுத்த 3 ஆண்டுகளில் ஊழல் இல்லாத நாடாக இந்தியா மாறும் என்றார் அரவிந்த் கேஜரிவால்.