2ஜி வழக்கில் தேசப்பாதுகாப்பு குறித்து சி.பி.ஐ விசாரிக்கவில்லை: சுப்பிரமணிய சுவாமி
புதன், 18 மே 2011 (14:54 IST)
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையுடன் தனது புகாரை இணைக்க அந்த அமைப்பு விரும்பவில்லை. எனவே அதைத் தனியாக விசாரிக்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சி.பி.ஐ விசாரணை நடத்தாத தேசப்பாதுகாப்பு குறித்த பல்வேறு அம்சங்கள் தனது புகாரில் உள்ளன என்று சி.பி.ஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனியிடம் சுவாமி தெரிவித்தார்.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக தன்னை நியமிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்திய சுப்பிரமணிய சுவாமி, அரசு வழக்கறிஞராவதற்கு தனக்கு எல்லா உரிமையும் உள்ளது என்று கூறினார்.
2ஜி தொடர்பான அனைத்து முடிவுகளையும் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ராசாவும், அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரமும் எடுத்துள்ளனர். அப்படியிருக்க சி.பி.ஐ அதன் குற்றப்பத்திரிகையில் ராசா மீது அனைத்து குற்றங்களையும் சுமத்தியுள்ளது என சுவாமி தெரிவித்தார்.
சுப்பிரமணிய சுவாமியின் வாதங்களைத் தொடர்ந்து இதுதொடர்பான விசாரணையை ஆகஸ்டு 26ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.