2ஜி வழக்கில் சேர்க்கப்படுவாரா ப.சிதம்பரம்? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

புதன், 1 பிப்ரவரி 2012 (20:18 IST)
2ஜி ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்‍கீடு நடைபெற்ற காலத்தில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் துணைப்பட்டியலில் சேர்க்‍கப்பட வேண்டும் என்று கோரி,சுவாமி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ஐ.எஸ்.ஐ. உள்ளிட்ட உளவு அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் எச்சரிக்‍கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்‍கு அலைக்கற்றை உரிமங்கள் வழங்கியதன் மூலம், நாட்டின் பாதுகாப்புக்‍கு சிதம்பரம் குந்தகம் ஏற்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், சிதம்பரத்தின் ஒப்புதலுடனேயே அலைக்கற்றை ஒதுக்‍கீட்டில் விலை நிர்ணயம் உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்‍கப்பட்டது என்றும், இதுதொடர்பாக ஆ.ராசாவை, சிதம்பரம் பலமுறை சந்தித்துப் பேசியுள்ளார் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அப்போதைய நிதியமைச்சகத்தின் கடித பரிமாற்றம் தொடர்பான சில ஆவணங்களையும் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் 2ஜி ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்ப்பதா இல்லையா என்பது குறித்த தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை வழங்க உள்ளது.


வெப்துனியாவைப் படிக்கவும்