13,000 பேர் கற்பழிப்பு, 19,902 கடத்தல் வழக்கு - அதிர்ச்சி தகவல்

வியாழன், 1 ஆகஸ்ட் 2013 (14:28 IST)
FILE
அசாமில் மட்டும் கடந்த 8 ஆண்டுகளில் 13,000 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநில உள்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு மே மாதம் வரை 12,857 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், 59 பெண்கள் கற்பழிக்கபட்டப்பின் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 8,181 கற்பழிப்பு வழக்குகளில் 76 சதவீதம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு 12, 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதே போல, கடந்த ஆண்டுகளில் சுமார் 19,902 பெண் கடத்தல் வழக்குகள் பதிவாகியிருந்தன.அதில் 14,488 வழக்குகளில் பெண்கள் திருமணம் சார்ந்த விஷயங்களுக்காக கடத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய குற்றங்களுக்கு சமூக மற்றும் குடும்ப பளு, பாலின பாகுபாடு, வறுமை, வேலை வாய்ப்பு இல்லாமை போன்றவை தான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்