ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கவுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்திற்கு பொருந்ததாக வகையில் சொத்துக்குவித்துள்ளதாக தொடரப்பட்டுள்ள வழக்கு பெங்களூரு, சிறப்புநீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் சிறப்புநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வாதாடுவதற்கு சென்றிருந்ததால் சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அரசு தரப்பு வழக்குரைஞர் பவானிசிங், அவரது உதவியாளர் முருகேஷ்மராடியால் ஆஜராக இயலவில்லை. இதை தொடர்ந்து காலை 11 மணிக்கு தொடங்கவேண்டிய விசாரணையை மாலை 3 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
அப்போதும் பவானிசிங் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனிடையே, நீதிமன்ற சம்மன்பேரில் மெடோ அக்ரோஃபாரம் நிறுவனத்தின் சாட்சிகள் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இவர்களின் வாக்குமூலத்தை பதிவுசெய்யுமாறு மெடோ அக்ரோஃபாரம் நிறுவன வழக்குரைஞர் தியாகராஜன் நீதிபதியை கேட்டுக்கொண்டார். அரசு தரப்பு வழக்குரைஞர் பவானிசிங் நீதிமன்றத்தில் இல்லாமல் வாக்குமூலங்களை பதிவுசெய்ய இயலாது. ஆனால் 8 சாட்சியங்களின் பயணச்செலவை நீதிமன்றம் ஏற்கும் என்று கூறிய நீதிபதி, அடுத்தவிசாரணையை 16 ஆம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தங்களது சொத்துகளை விடுவிக்கக்கோரி லெக்ஸ் பிராபர்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த மனுவை சிறப்புநீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, லெக்ஸ் பிராபர்டீஸ், மெடோ அக்ரோஃபாரம், சைனோரா ஃபைனான்ஸ், ராம்ராஜ் அக்ரோ உள்ளிட்ட 7 நிறுவனங்கள், சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சொத்துக்குவிப்பு வழக்குக்கும் தங்களது சொத்துகளுக்கும்சம்பந்தமில்லை. எனவே, எங்கள் சொத்துகளை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். அதற்குவசதியாக பிரதான வழக்கு விசாரணைக்கு தாற்காலிகமாக தடைவிதித்து, எங்கள் மனுக்கள் மீது விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்தமனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என்.நாராயணசாமி வியாழக்கிழமை முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞர் பவானிசிங், நிறுவனங்கள் தரப்பில் வழக்குரைஞர் ஜெயகுமார் எஸ்.பாட்டீல் ஆஜராகியிருந்தனர். இதன்மீதான விசாரணையை நீதிபதி மே 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.