1984 கலவரம் : டைட்லர் வழக்கை முடிக்க ம.பு.க. கோரிக்கை
வியாழன், 2 ஏப்ரல் 2009 (12:17 IST)
1984இல் நமது நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகதீஷ் டைட்லர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் விசாரணையை முடித்துக்கொள்ள விரும்புவதாக மத்தியப் புலனாய்வுக் கழகம் டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜெகதீஷ் டைட்லர் மீதான வழக்கு இன்று கூடுதல் பெருநகரத் தலைமை நீதிபதி ராகேஷ் பண்டிட் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ம.பு.க. தரப்பு வழக்கறிஞர் எழுந்து, "இந்த வழக்கில் நாங்கள் ரத்து அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். விசாரணையை முடித்துக்கொள்ள விரும்புகிறோம்" என்றார்.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது ம.பு.க. சமர்ப்பித்த நிலவர அறிக்கைகள், மார்ச் 28 அன்று சமர்ப்பிக்கப்பட்ட இறுதி விசாரணை அறிக்கை ஆகியவை அடங்கிய மூடி முத்திரையிடப்பட்ட உறையைப் பிரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது, டெல்லி சீக்கிய குருதுவாரா நிர்வாகக் குழு தரப்பு வழக்கறிஞர் எழுந்து தனது அதிருப்தியைத் தெரிவித்ததுடன், தான் நிரபராதி என்று கூறும் டைட்லருக்கு ம.பு.க.வின் அறிக்கைகள் இரகசியமாகத் தரப்பட்டுள்ளன என்று குற்றம்சாற்றினார்.
"தன்னை நிரபராதி என்று கூறிக்கொள்ளும் குற்றம்சாற்றப்பட்டவருடன் ம.பு.க. கூட்டுவைத்துள்ளதாகத் தெரிகிறது" என்றார் அவர்.
இதையடுத்து, இந்த வழக்கை ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 27இல் டைட்லர் மீதான வழக்கை முடித்துக்கொள்ள விரும்புவதாக ம.பு.க. தெரிவித்தது. ஆனால், ஜஸ்பிர் சிங் என்பவர் டைட்லருக்கு எதிராகச் சாட்சியளிக்க விருப்பம் தெரிவித்ததால் அவரிடம் விசாரணை நடத்தி அறிக்கையளிக்குமாறு அதே ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி நீதிமன்றம் ம.பு.க.விற்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில், 1984ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி குருதுவாரா புல்பங்காஷ் என்ற சீக்கியர்களின் வழிபாட்டுத் தலத்திற்கு மர்மக் கும்பல் தீ வைத்ததில் 3 பேர் பலியானது தொடர்பாக, டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.