விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ. போராட்டம்

சனி, 23 ஜனவரி 2010 (19:24 IST)
விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் இன்று இதனை தெரிவித்த மக்களவை எதிர்கட்சித் தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஸ்மா ஸ்வராஜ், மத்தியில் ஆட்சியில் உள்ள ஐமுகூ அரசின் தவறான கொள்கைகளே விலைவாசி விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததற்கு காரணம் என்றார்.

சர்க்கரை விலை எப்போது குறையும் என்று தம்மால் முன்கூட்டியே ஆருடம் கூற முடியாது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ஷரத் பவார் அண்மையில் கூறியதை குறிப்பிட்ட சுஸ்மா, இது பொறுப்பற்ற பேச்சு என்றார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட மத்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் தெலங்கானா உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களில் முன்கூட்டியே ஆழமாக சிந்திக்காமல் ஐமுகூ அரசு முடிவுகளை அறிவிப்பதாகவும் அவர் குற்றம் சாற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்