ராஜீவ் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் : சோனியா அஞ்சலி

முன்னாள் பிரதர் ராஜீவ் காந்தியின் 16வது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடமான வீர் பூமியில், அவரது மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்!

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி சோனியா காந்தி செலுத்தினார். முன்னதாக குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பட்டீல், பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, டெல்லி முதலமைச்சர் ஷீலா தீக்ஷித், ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் கருணாநிதி, பிறகு அரசு ஊழியர்களுடன் இணைந்து, பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களும், சட்டப் பேரவை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் அவர் நினைவாக எழுப்பப்பட்டுள்ள சதுக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், ஏராளமான தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்