மும்பை குண்டு வெடிப்பு : அபு சலீம் கூட்டாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல்!

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளி அபு சலீமின் கூட்டாளியான மன்சூர் குரேஷிக்கு, நடிகர் சஞ்சய் தத்தின் இல்லத்தில் இருந்து ஏ.கே.56 துப்பாக்கிகளை இடமாற்றம் செய்ய உதவிய குற்றத்திற்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றம் உறுதி செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை விதித்து வரும் மும்பை தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.டி. கோடே, குரேஷிக்கு 10 ஆண்டு கால கடுங்காவல் சிறைத் தண்டனையும், அபராதமாக ரூ.50 ஆயிரமும் விதித்துள்ளார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டுக் காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

பயண ஏற்பாட்டு முகவர் தொழில் செய்து வந்த குரேஷி, மும்பை தொடர் குண்டு வெடிப்பிற்கு முன்னர் அபு சலீமுடன் நடிகர் சஞ்சய் தத் வீட்டிற்குச் சென்று, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை கொண்டு வந்து இவ்வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சைபுனிசா காஜி என்பவரின் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்