மும்பை குண்டுவெடிப்பு: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்

ஞாயிறு, 17 ஜூலை 2011 (17:57 IST)
மும்பையில் அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த அழைத்துச் செல்லப்பட்டவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு குற்றவாளி அஃப்சல் உஸ்மானியின் சகோதரரான ஃபைஸ் உஸ்மானி என்பவர் மும்பை புறநகரான கோவண்டியில் வசித்து வந்தார்.

இவரை,மும்பை குண்டுவெடிப்பு சம்பாம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக செம்பூர் காவல்துறையினர் அழைத்துச் சென்றிருந்தனர்.

ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த மூன்று தினங்களாக மருந்து எதையும் உட்கொள்ளவில்லை.

இதனையடுத்து அவர் நேற்று மாலை 5.50 மணியளவில் லோகமான்ய திலக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டுவந்த நிலையில்,இன்று அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே போலீசாரின் துன்புறுத்தல் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக உஸ்மானியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால் காவல்துறையினர் அதனை மறுத்துள்ளனர்.உஸ்மானியின் மரணத்துக்கான சரியான காரணம் பிரேதப் பரிசோதனையில்தான் தெரியவரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே உஸ்மானியின் மரணம் குறித்து சிஐடி விசாரணை நடத்த மகாராஷ்ட்ரா காவல்துறை டிஜிபி உத்தத்ரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்